பல்கலைக்கழகங்களில் கலைப்பீடங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு அவர்களது பாடநெறிக்கு மேலதிகமாக ஆங்கிலம், மும்மொழி, தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா, தாதியர், துணை மருத்துவர் ஆகியவற்றுக்கான சிறப்பு பட்டம் வழங்கவும் உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் பட்டதாரி மாணவர்களுக்கு ஆங்கில மொழி அறிவு இல்லையெனில் உடனடியான வேலைவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மொத்தமாக பட்டதாரிகள் என்ற குழுவுக்குள் இருந்து கொண்டு வேலை தேடி அலையும் நிலை உருவாகும் என்றும் அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க கூறினார்.
உயர் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் பதிலளித் துப் பேசும் போதே அமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். வட பகுதியில் பல்கலைக்கழகங்களில் தனித் தமிழிலேயே பட்டங்கள் வழங்கப் படுகின்றன. தென்பகுதியில் தனிச் சிங்ளத்தில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலை மாற்றப்படல் வேண்டும்.
பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பட்டதாரிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக தனியார் துறையினருடன் பேச்சு நடத்தினோம். 250 பேருக்கு நேர் முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டது. இதில் 16 பேர் மட்டுமே தெரிவானார்கள். அவர்களில் 2 பேர் மட்டுமே வேலைக்கும் வந்தனர்.
தனியார் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மருத் துவ சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக் கின்றனர். யார் இதற்கு எதிர்ப்பு தெரிவித் தாலும், தனியார் மருத்துவ கல்லூரி கொண்டுவரப்படும். இது மட்டுமல்ல மேலும் தனியார் பல்கலைக்கழகம் கொண்டுவரப்படும்.
அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு விரைவில் கொண்டுவரப்படும் இதன் மூலம் வர்த்தக ரீதியில் பட்டம் வழங்கும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுவிடும். அரச சார்பற்ற பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கான வேலைகள் பூர்த்தி யடைந்த நிலையில் உள்ளது.
ஒழுங்கற்ற முறையில் பட்டம் வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு இதனூடாக தடை விதிக்கப்பட்டு விடும். நாடு முழுவதும் இவ்வாறான நிறுவனங்கள் இயங்குவதுடன் சில நிறுவனங்கள் 4 மாதம், மூன்று மாதம் 6 மாதம் போன்ற காலத்தினுள் பட்டங்களை வழங்குகின்றன என்றும் எஸ். பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment