Friday, December 09, 2011

அமெரிக்க உளவு விமானம் ஈரானிடம் சிக்கிய இரகசியம்


ஈரான் கைப்பற்றியுள்ள உளவு விமானம் தம்முடையதுதான் என்ற உண்மையை செவ்வாய்க்கிழமை ஒப்புக் கொண்டுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.யின் மிகத் துல்லியமான, அதிக பெறுமதிமிக்க இந்த விமானத்தை ஈரானிடம் இழந்திருக்கிறது அமெரிக்கா விமானம் தற்போது ஈரானிய ராணுவத்தின் வசம் உள்ளது. சி.ஐ.ஏ. உளவு விமானத்தை எப்படி ஈரான் கைப்பற்றியது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.

அமெரிக்கா இழந்துள்ள RQ-170 விமானம், வெளிநாடுகளை உளவு பார்ப்பதற்காக சி.ஐ.ஏ. இரகசியமாக உபயோகித்த விமானம். பாகிஸ்தானில் பின்லேடன் மறைந்திருந்த கம்பவுண்டை வானில் இருந்து மாதக் கணக்கில் உளவு பார்த்து தகவல் கொடுத்த விமானமும் இதுவே.

இந்த விமானத்தில் இருந்து கிடைத்த நேரடி வீடியோவை வைத்தே, பின்லேடனின் நடமாட்டம் அந்த இடத்தில் உள்ளது என்பதை சி.ஐ.ஏ. உறுதி செய்துகொண்டது. பின்லேடன் கொல்லப்பட்டு ஒரு மாதத்தின் பின்னரே, அந்த ஆபரேஷனுக்கு RQ-170 உளவு விமானம் உபயோகிக்கப்பட்ட தகவலை சி.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது.


சி.ஐ.ஏ.க்கு இது மிகப்பெரிய இழப்பு என்பதை சி.ஐ.ஏ. அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர். RQ-170 விமானம் சி.ஐ.ஏ.க்கு மிக முக்கியமானது என்ற வகையில் அதன் இருப்பு பற்றியே சி.ஐ.ஏ. ரகசியம் காத்து வந்தது. நீண்டகாலமாக இந்த விமானத்தின் போட்டோக்கள்கூட வெளியே செல்லாதபடி பார்த்துக் கொண்டது. (இன்றுகூட வெளியே உலாவும் போட்டோக்களில் பெரும்பாலானவை கிராபிக் அனிமேஷன்கள். மிகச்சிலவே நிஜமான போட்டோக்கள்!) RQ-170 தமது நாட்டுக்கு மேலாகப் பறந்து உளவு பார்த்தபோது கைப்பற்றப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. விமானம் தம்முடையதுதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்க அதிகாரிகள், விமானம் ஈரானிய வான்பரப்பில் பறந்ததா என்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டனர். விமானம் கைப்பற்றப்பட்ட தினத்தில் சி.ஐ.ஏ.-யின் ஆபரேஷன் ஒன்றுக்காகவா பறக்க விடப்பட்டது என்ற கேள்விக்கு பென்டகன் பேச்சாளர் ஜோர்ஜ் லிட்டல் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

தமது நாட்டு அணு ஆலைகளை உளவு பார்க்கவே விமானம் பறந்ததாக கூறுகின்றது ஈரான். இந்த விவகாரத்தில் ஒரு தொழில்நுட்ப தந்திரம் செய்யப்பட்டதாக உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. குறிப்பிட்ட விமானத்தில் இருந்து வருவது போன்ற போலியான சிக்னல்களை சி.ஐ.ஏ. ஏற்படுத்தியதாகவும், அந்த சிக்னல்களின்படி விமானம் ஆப்கானிஸ்தானுக்கு மேலாக அமெரிக்க ராணுவ நடவடிக்கை ஒன்றுக்காக பறந்து கொண்டிருப்பது போன்ற செயற்கைத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள்.

அதன்படி விமானம் ஆப்கானுக்கு மேலாக இருப்பதாக மற்றையவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, ஆக்சுவல் விமானம் ஈரானிய வான்பரப்பில் இருந்தது என்றும் கூறுகிறார்கள்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானிலுள்ள ஐ.எஸ்.ஏ.எஃப் (International Security Assistance Force), இதே விமானம் பற்றி தமது செய்திக் குறிப்பில் ஒரு தகவல் வெளியிட்டிருந்தது. மேற்கு ஆப்கான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த RQ-170, காலநிலை காரணமாக திசைமாறிச் சென்றுவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் குறிப்பு வெளியாவதற்கு முன்னரே, விமானம் ஈரானால் கைப்பற்றப்பட்டதாக இப்போது தெரிய வருகின்றது.

விமானம் ஈரானிடம் இழக்கப்பட்டதையோ, அது ஈரானிய வான்பரப்பில் பறக்க விடப்பட்டதையோ மறைக்கவே, ஐ.எஸ்.ஏ.எஃப். செய்திக் குறிப்பில் இந்த செய்தி இணைக்கப்பட்டதாக இப்போது ஊகிக்கிறார்கள். காரணம், RQ-170 ஆபரேஷன்கள் இரகசியமானவை. அவை பற்றிய விபரங்கள் இராணுவ செய்திக் குறிப்புகளில் வெளியாவதில்லை.

இந்தத் திசைதிருப்பலை ஈரான் எப்படிக் கண்டுபிடித்தது என்பதும், பறந்து கொண்டிருந்த விமானத்தை எப்படி தரைக்கு கொண்டு வந்தது என்பதும் இந்த நிமிடம் வரை மர்மமாகவே உள்ளது.



0 comments:

Post a Comment