Tuesday, January 10, 2012

இம்முறை அநுராதபுரத்தில் சுதந்திர தின வைபவம்


"ஆச்சரியமிக்க தேசத்தைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தின வைபவம் அநுராதபுரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின்கீழ் நடைபெற்று வருவதுடன் விழா ஏற்பாடுகள் குறித்த முக்கிய மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது.

அமைச்சர் ஜோன் செனவிரத்னவின் தலைமையில் நடை பெற்ற இந்த விசேட மாநாட்டில் உயர்மட்ட அதிகாரிகள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் முக்கியஸ்தர்கள் பல ரும் கலந்து கொண்டனர். சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் பல இதன் போது நிறைவேற்றப்பட்டதுடன் பாதுகாப்பு நடவடிக்கை முக்கிய பல விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டன.

இம்முறை தேசிய தின பிரதான வைபவம் அநுராதபுரம் சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தையில் நடைபெறவுள்ளதுடன் சமகாலத்தில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள தேச பிதா டீ. எஸ். சேனநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் வைபவம் நடைபெறவுள்ளது. இம்முறை சுதந்திர தின வைபவத்தில் 3000 சிறப்பதிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதுடன் முப்படைகளையும் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்ட பாடசாலைகளிலிருந்து மூவினத்தையும் சேர்ந்த 125 மாணவிகள் தேசிய கீதம் மற்றும் ‘ஜய மங்கல’ கீதம் ஆகியவற்றை இசைக்கவுள்ளனர். பிரதமர் டி. எம். ஜயரட்ண உட்பட அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளும் தேசிய தின சமய வழிபாடுகள் அநுராதபுர நகரிலுள்ள சமய வழிபாட்டுத் தகவல்களில் நடைபெறவுள்ளன.

அநுராதபுரம் ஸ்ரீமாபோதியில் நடைபெறும் பெளத்த சமய வழிபாடுகளில் பிரதமர் டி.எம். ஜயரத்ன கலந்து கொள்வார். அநுராதபுரம் ஸ்ரீ கதிரேசன் தேவஸ்தானத்தில் நடைபெறும் இந்த சமய வழிபாடுகளில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் கலந்து கொள்ள மொஹிடீன் ஜும்மாபள்ளிவாசல் இஸ்லாமிய சமய வழிபாடுகளில் அமைச்சர்கள் ஏ.எச்.எம். “பெளஸி, ரிசாட் பதியுதீன் ஆகியோரும் புனித சூசையப்பர் ஆலய கத்தோலிக்க சமய வழிபாடுகளில் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தேசிய தினத்தன்று அரச நிறுவனங்கள் மற்றும் பொது ஸ்தாபனங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றியும் நேற்றைய மாநாட்டில் கலந்துரையாடப்பட்டன. இதற்கிணங்க பெப்ரவரி 3,4ஆம் திகதிகளில் அரச நிறுவனங்கள், பொது ஸ்தாபனங்களில் தேசியக் கொடிகளை ஏற்றுவதுடன் மின் குமிழ் அலங்காரங்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான அறிவித்தல்களை எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சு வெளியிடவுள்ளது.

அநுராதபுரத்தில் தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெறும் முன்னோடி நடவடிக்கைகளப் பார்வையிடுவதற்காக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமையிலான விசேட குழுவொன்று அங்கு விஜயம் செய்யவுள்ளது. இம்முறை சுதந்திர தினம் நடைபெறும் அநுராதபுரத்திலேயே “தயட்ட கிருள” கண்காட்சியும் நடைபெறவுள்ளது அதற்கான சகல நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment