Tuesday, November 08, 2011

இரத்த அழுத்தம் என்றால் என்ன


இரத்த நாளங்களில் உள்ள இரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை 'ரத்த அழுத்த நோய்' அல்லது 'இரத்தக் கொதிப்பு' என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை 'சைலன்ட கில்லர்' என்றும் கூறுவர்.

இந்நோய் எப்போது கண்டு பிடிக்கப்பட்டது?
1732இல் 'ஸ்டீபன் ஹேல்ஸ்' என்பவர் ஒரு குதிரையின் இரத்த அழுத்தத்தை சாதாரண 'மானோ மீட்டர்' என்ற கருவியை வைத்து அளந்தார். 1896இல் 'சிவரோசி' என்பவர் நாம் இப்போது பயன்படுத்தும் 'ஸ்பிக்மோ மேனோ  மீட்டரை' கண்டு பிடித்தார். 1905இல்தான் இரத்த அழுத்த நோயினுடைய முக்கியத்துவம் தெரிய வந்தது. உயர் ரத்த அழுத்தம் அதிக அளவு நோயை ஏற்படுத்துகிறது என்றும், பலர் இறந்து போகின்றனர் என்பதையும் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழகம்தான் கண்டு பிடித்தது. அதன்பின் அனைவரது கவனமும் இதன் மீது திரும்பியது.

உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?


மருத்துவம் பயின்ற எவரும் இரத்த அழுத்தக் கருவியின் மூலம் இரத்த அழுத்தத்தைக் கண்டுபிடித்து விடலாம். மேல் அளவு 140க்கு மேலேயோ அல்லது கீழ் அளவு 90க்கு மேலேயோ இருந்தால் அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயிருந்தால் இரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு இரத்த அழுத்தம் இருந்தால் அவரை 'இரத்த அழுத்த நோயாளி' எனக் கூறலாம்.
 
ரத்த அழுத்த நோயை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
1. கீழ் இரத்த அழுத்த அளவு 91 முதல் 105 வரை.
2. 106 முதல் 115 வரை.
3. 115க்கு மேல் இருப்பது. இவர்களுக்கு கண்களின் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

எதனால் ரத்த அழுத்தம அதிகமாகிறது?
1. காரணம் ஏதுமின்றி வரும் இரத்த அழுத்தம் 90 சதம் பேரை பாதிக்கிறது. இதற்கான காரணம் துல்லியமாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.
2. மீதமுள்ள 10 சதவீதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளினாலும் மற்ற காரணங்களினாலும் இரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.
இரண்டாவது வகையைச் சார்ந்த 10 சதவீதம் பேரை முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்புள்ளது. அதன் காரணத்தை கண்டுபிடித்து அதை அகற்ற முடிந்தால் இரத்த அழுத்தம் சாதாரண நிலையை அடையும். முழுமையான உடற் பரிசோதனை மற்றும் இரத்த சோதனைகளை செய்வதம் மூலம் இந்நோய்க்கான காரணங்களை கண்டறியலாம். இதனால் இதய வீக்கம், இதய இரத்த ஓட்டம் குறைதல், மாரடைப்பு நோய், கை, கால் இயங்காமல் போவது சிறுநீரகங்கள் பழுதடைதல் போன்றவை ஏற்படும்.
 
ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்?
முதலில் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். இதில் சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். இரண்டாவதாக ரத்தத்தில் சர்க்கரை நோயும், இரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பும், மேற்சொன்ன நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். 'ஈ.சி.ஜி.' என்பது இதயம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய உதவும் பரிசோதனையாகும். இதயம் வீக்கமாகி உள்ளதா என அறிய 'எக்ஸ்ரே' பரிசோதனை உதவும். 'எக்கோ', 'ஆஞ்சியோகிராம்' போன்ற பரிசோதனைகளைக்கூட செய்து பார்க்கலாம்.

கர்ப்பிணிகளுக்கும் மற்றவர்களுக்கும் வரும் ரத்த அழுத்தத்திற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?
கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வகை இரத்த அழுத்த நோய் 'பிரி-எக்லாம்சியா' என்பதாகும். இது முதன் முறையாக கர்ப்பமடைபவருக்கே 95 சதவீதம் வரும். பல குழந்தைகள் பெற்றவர்களை விட குழந்தையே பெறாமல் முதல் முறையாக கர்ப்பமடைந்த பெண்களுக்கு 6 முதல் 8 மடங்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பல குழந்தைகளை வயிற்றில் சுமந்தவர்களுக்கும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். இந்நோயின் மற்ற அறிகுறிகளாக-கால்வீக்கம், இரத்தக்கொதிப்பு, சிறுநீரில் புரதசத்து வெளியேறுதல் ஆகியவை உண்டாகும். இதை மருந்துவத்தின் மூலம் சரி செய்யாவிடில் வலிப்பு நோய் மற்றும் உணர்விழந்து போகுதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். பெண்களின் கர்ப்ப காலம் முடிந்தவுடன் இந்நோய் உடனடியாக மறைந்து விடும். இதனை கர்ப்பகால இரத்த அழுத்தம் என்கிறார்கள்.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு அறிவுரை:
நீங்கள் இரத்த அழுத்த நோயாளி எனில், இந்நோய் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள். இந்நோயை கட்டுப்படுத்தாவிடில் இது மாரடைப்பு, மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனைப்படி செயலாற்றுங்கள். உப்பு அதிகமுள்ள ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உப்பு, உடலில் நீரை தங்கச் செய்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கால், கைகள் வீங்க வைக்கும். இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெய், நெய், எண்ணெய் போன்ற கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை சாப்பிடாதீர்கள்.

கொழுப்பு சத்து இரத்தக் குழாய்களை அடைத்துக் கொண்டு மேற்சொன்ன வியாதிகளை உண்டு பண்ணக் கூடும். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தவிர்த்து விடுவதுடன் அழுத்தத்தையும் குறைக்கும். புகை பிடிப்பவராக இருந்தால் உடனேயே அதை நிறுத்துங்கள். புகை பிடிப்பவர்கள் இரத்த அழுத்த நோயினால் அவதிப்படுவதோடு அல்லாமல் மாரடைப்பு நோயினாலும் உயிரிழக்க நேரிடும்! மருத்துவரின் ஆலோசனையின்றி அவர் சிபாரிச் செய்யும் மருந்துகளின் அளவை நீங்களாகவே குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது. உடல் எடையை குறையுங்கள். உங்களுடைய இரத்த அழுத்தத்தின் அளவை முறையாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு முறை எழுதிக் கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.

ஹோமியோ மருந்துகள்:
RAUWOLFIA Q, CRATAE-GUS Q, ADONISVER Q போன்ற சொட்டு மருந்துகளை இரத்த அழுத்த அடிப்படையில், அதாவது ரத்த அழுத்தமிகுதி அல்லது குறைவின் அடிப்படையில், நீரில் கலந்து குடிக்கலாம். DIGITALIS, CACTUS BERBERIS VULGARIS போன்ற மாத்திரைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். பக்க -பின் விளைவுகள் ஏற்பட்டால் ஹோமியோபதி நிபுணரை நேரில் அணுகி அவரது பரிந்துரையின்படி மருந்துகளை சாப்பிட வேண்டும். பயோகெமிக் மருந்துகளும், கூட்டுக்கலவை மருந்துகளும், சில வகை தாய்திரவங்களின் (MOTHER TINCTURES) கலவைகளும் இதற்க மிகவும் உதவும். இவை எல்லாம் வாழ்க்கை முறை நோய்களாகிப் போனதால் உடற்பயிற்சி, உணவு, உறக்கம் ஆகியவற்றிலும் அன்றாடம் கவனம் செலுத்த வேண்டும்.

இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப் பேனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்!

0 comments:

Post a Comment