Saturday, November 19, 2011

கடல் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் மரணம்


(கலாநெஞ்சன்) 
கடல் பாம்பு கடித்ததில் உடலில் விஷம் ஏறி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை மரணமாகியுள்ளார். இச்சம்பவம் நீர்கொழும்பு கொச்சிக்கடை போருதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நாகூர் பிச்சை புஹாருதீன் நிசாம்தீன் (40 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் மரணமாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; குறித்த நபர் கடந்த புதன்கிழமை போருதோட்ட பிரதேசத்தில் கடற்பகுதியில் (மோயகட்ட- கழிமுகம்) குளித்துள்ளார். குளித்துக்கொண்டிருக்கும்போது அவரது உடலை ஏதோ ஒன்று கடித்துள்ளது அவர் அதனை மீன் கடித்ததாக நினைத்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த நாள் வியாழக்கிழமை அவர் சுகயீனமடைந்துள்ளார். உடலும் வீக்கமடைந்துள்ளது. பின்னர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மோற்கொண்ட சிகிச்சையின்போது இவரை கடல் பாம்பு கடித்தது தெரியவந்துள்ளது .

இதனையடுத்து குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் இவரது சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளதுடன் இரத்தமும் மாற்றப்பட்டது. தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று சனிக்கிழமை (19) இவர் மரணமாகியுள்ளார்.

இதேவேளை கடல் பாம்பு கடித்ததில் உடலில் விஷம் ஏறி இந்த மரணம் நிகழிந்துள்ளதாக கொழும்பு திடீர்மரண விசாணை அதிகாரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment