ஆரையம்பதி - காத்தான்குடி பிரதேச எல்லையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இனந்தெரியாதோரினால் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை ஆரையம்பதி பிரதேசசபையினால் நிறுவப்பட்டிருந்தது.
இந்த உருவச்சிலையே சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த உருவச்சிலையின் கை மற்றும் கால், முகம், இடுப்புப்பகுதி ஆகியவற்றில் சேதமேற்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் சேதமாக்கப்பட்ட சிலையை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதேநேரம் சம்பவ இடத்துக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் இது தொடர்பிலான விசாரணையை மேற்கொண்டார். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment