கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பிதேசங்களில் திருடப்பட்ட 18 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு முச்சக்கர வண்டிகளுடனும் ஒரு மோட்டார் சைக்கிளுடனும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்தை சேர்ந்த குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிசாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 20 முதல் 25 வயதுக்குட்பட்ட முஸ்லிம் இளைஞர்களாவர். சந்தேக நபர்கள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு பிரதேசங்களில் பள்ளிவாசல்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளையும் மோட்டார் சைக்கிள்களையும் திருடி வந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டிகள் இரண்டும் நீர்கொழும்பு பிரதேசத்திலும். மற்றைய இரண்டு முச்சக்கர வண்டிகளும் கொழும்பு மருதானை பிரதேசத்திலும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த வாகனங்கள் புத்தளம் மற்றும் மினுவாங்கொட பிரதேசத்தில் அடகு வைக்கப்பட்டும் விற்பனை செய்யப்பட்டுமுள்ள நிலையில் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடாதவர்கள் என்றும், இவர்களில் ஒருவர் திருமணமானவர் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களை நீர்கொழும்பு மற்றும் மாளிகாகந்தை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தாக குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஜகத் நிசாந்த பெர்னாண்டோ தெரிவித்தார் .
நீர்கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கலப்பதியின் ஆலோசனையின் பேரில் மாவட்ட பொலிஸ் அதிகாரி ஆனந்த பெர்னாண்டோவின் வழிகாட்டலின் கீழ், நீர்கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ஜகத் நிசாந்த பெர்னாண்டோவின் தலைமையில் உதவிப்பொலிஸ் பரிசோதகர்களான சுனில், மஹிந்த, சார்ஜன்ட்களான ரஹுப், ( 63188),சமன் (20440), நிஹால் (7373), திசாநாயக்க (32586), சுதத் (53155), ஹேரத் (34064), விஜேசேகர (26330 ), பாலித்த (31886), பொலிஸ் கான்ஸ்டபிள் சமன் (14037) ஆகியோர் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ததோடு திருடப்பட்ட வாகனங்களையும் மீட்டுள்ளனர்.




0 comments:
Post a Comment