எப்போதாவது ஒரு நாள்தான்
அந்த வீதிகளில்
அவள் யாசகம் கேட்டு
வருவாள்
தண்ணி நிரம்பிய
வெள்ளைக் கோப்பையில்
வந்தமர்ந்த
நிலாத் தூறல் போல
நல்ல வடிவான
வட்ட முகம்
பிச்சைக்காரி என்றால்
ஊத்தைப் புடவைதான் என்றிருந்த
எனக்குள்ளான படிமத்தை
உடைத்து எறிந்தவள்
அந்த அழகான பிச்சைக்காரி
அழகாய் உடுத்தி
அம்சமாய் வருகிற
அழகான யாசகி அவளை
வாயால் வீணி வடியப் பார்க்கும்
கடைத் தெரு மாந்தர்கள்
இடையிடையே
குழந்தை ஒன்றையும்
சுமந்து வருகிற
அவளுக்காய்
அந்த வீதியில் பரிதாபப்படுவோர்
யாருமில்லை
விரல் உரசி
ஒன்றுக்கு பத்து ரூபாய்
கொடுக்கும்
சில விழிகளின்
விரசமான
மோக விண்ணப்பங்களில்
அந்த அழகான பிச்சைக்காரி
கூனிக் குறுகிப் போகிறாள்
-எஸ்.ஜனூஸ்-

0 comments:
Post a Comment