Tuesday, December 06, 2011

நீயே என் சுவாசம் - தொடர்கதை 03

நீயே என் சுவாசம்


(கட்டாரிலிருந்து பாத்திமா நிஹாஸா)


 அத்தியாயம் 03

இரவு உடைக்கு மாறினாள் மானிஷா…மெல்லிய ஒப்பணையில் மிகவும் அழகாகத் தெரிந்தவளது மனது வலிகளினால் நிரம்பி வழிந்தது…ஏனோ அறையிலிருக்கப் பிடிக்கவில்லை முன் கூடத்துக்கு வந்து தொ.கா.வை முடுக்கிவிட்டு ஸோஃபாவில் அமர்ந்தாள்.
திரையில் பெயர்கள் ஓடின..ஏதேதோ படங்கள் போயின ….மனதில் ஒன்றும் ஒட்டவில்லை…காலை ரிஷியுடனான உரையாடல் ஞாபகத்தில் வந்து பாடாய் படுத்திக்கொண்டிருந்தது.
“ சீ….என்ன மடத்தனம் பண்ணிவிட்டேன்…ரிஷி ரொம்பவே கவலைப்பட்டிருப்பாரோ? என்ன இருந்தாலும் நான் அப்படி பேசி இருக்கக்கூடாது…ரிஷி…. என்னை மன்னிச்சிடுங்க….என் காதலை சொல்கிற நிலமையில் நான் இல்லை ரிஷி…” தன்னை நொந்து கொண்டாள்.தனக்குத்தானே புலம்பித்தீர்த்தாள்.
அவளது புலம்பலைத் தகர்த்தெரிந்தது வீட்டு அலைப்பு மணி.தன்னை சுதாகரித்துக்கொண்டவள் மெல்லப்போய் கதவைத்திறந்தாள்
குடிபோதையில் தள்ளாடியபடி நின்றிருந்தான் பரணி.பரணியைக் கண்டமாத்திரத்தில் மானிஷாவின் முகம் சட்டெனக் கலையிழந்தது.
“ என்னடா கண்ணு…இப்படி முறைக்குறே…வழியை விடுடா என் செல்லம்” வார்த்தைகள்…வழுக்கி விழுந்தன.
மது வாசணை குப்பென்று வீச முகம்சுழித்தாள் இரண்டடி பின்னெடுத்துவைத்தாள் மானிஷா.
“ குடிச்சருக்கீங்களா….” ஒற்றைவரியில் சுருக்கிக்கொண்டாள் பேச்சை.
“ ஆமாம்…குடிச்சேன்..இப்போ அதுக்கு என்னாங்கறே…இதெல்லாத்துக்கும் உன்கிட்ட அனுமதி கேக்கனுமா என்ன?...வழியை விடுடி….”
தள்ளாடியபடியே வந்த பரணி தொப்பென்று ஸோஃபாவில் சரிந்தான்.கழுத்தை நெரித்த டையை மெதுவாய் தளர்த்தினான்.ஷேட் பொத்தானை தடுமாறியபடியே கழட்டினான்…
கதவோரத்தில் இருந்து தன்னை முழுதாய் மறைத்து தலையை மட்டும் நீட்டிக் காத்திருந்தாள் மானிஷா அவனது பதிலுக்காய்.
“என்ன மொறச்சிப் பார்க்குறே…போய்த் தூங்கு…துணைக்குகூப்பிட்டா  வந்திரவா போறே…அப்போ ஏன்டி பார்த்திட்டு இருக்கே…” சலித்துக் கொண்டான் பரணி.
“ இல்லை…சாப்பாடு…எடுத்து.. வைக்கட்டுமா..ன்னு…கேக்கத்தான்…” வார்த்தைகளை முடிக்க முடியாமல் திணரினாள்.
“ ஐயோ…ஐயோ…இது என்னடா புதுசாருக்கு….இத்தனை நாள் இல்லாத அக்கரை….இப்பமட்டும் எப்படி…எங்கேயோ இடிக்குதே….” பெரிதாகச்சிரித்தபடியே…மானிஷாவை கிரக்கமாய்ப் பார்த்தான்
“ நீ என்கிட்ட எதையோ எதிர்பார்க்குறே…அப்படித்தானே….”பரணி மீண்டும் மானிஷாவை வம்புக்கு இழுத்தான்.
“ தெரிஞ்சிருந்தும் ஏன் என்னை இம்சிக்குறே…உன்னை நம்பிவந்ததுக்கு இதுவா நீ தரும் பரிசு…அவளைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா..?” தன் இயலாமையை நொந்து கண்ணீர் விட்டாள்…
“அப்போ..இன்னிக்கு நான் உன்கூட தங்குறதுல ஆட்சேபணை இல்லைங்குறே…அப்படித்தானே…”ஒரு மார்க்கமாய் தள்ளாடியபடி எழுந்தான் பரணி….
“ சீ…இப்படிப்பேச வெக்கமாயில்லை…”
போதை வேலை செய்ய ஆரம்பித்திருப்பதைப் புரிந்த மானிஷா…கடுப்பாகி சட்டென்று திரும்பி தன் அறைக்கதவை தாளிட்டுக் கொண்டாள்
“…சொந்தப் பொண்டாட்டிக்கூட இப்படிப்பேசக்கூடாதா….இப்படி மொறக்கிறாளே… என்னடா உலகமிது” சலித்துக்கொண்ட பரணி தள்ளாடியபடி தன் அறைக்குப் போய்…கட்டிலில் விழுந்து உடனே உறங்கிப்போனான்.

0 comments:

Post a Comment