
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக குவைத் அரசாங்கம் 10.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இரண்டாம் கட்டமாக வழங்கியுள்ளதாக இலங்கை வந்துள்ள குவைத் நிதிய தூதுக்குழுவினர் தெரிவித்தனர். குறித்த நிதியுதவி குவைத் அரசாங்கத்தின் அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது என அந்நிதியத்தின் பிரதி பணிப்பாளர் ஹிசாம் அல் வாஹ்யான் குறிப்பிட்டார்.
இந்நிதியுதவியின் ஊடாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தரமான கற்கை நெறிகளை உருவாக்க முடியும். அத்துடன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழத்தில் தரமான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும் என குவைத் நிதியம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் குவைத் நிதியம் ஊடாக வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட அபிவிருத்திக்காக 800 மில்லியன் ரூபாவை குவைத் நிதியம் முன்னர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென் கிழக்கு பல்கலைக்கழக நிதியுதவி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.வி.ஜயசுந்தர மற்றும் குவைத் நிதிய பிரதி பணிப்பாளர் ஹிசாம் அல் வாஹ்யான் ஆகியோர் இலங்கைக்கான குவைத் தூதுவர் யாகூப் யூசுப் அலாதீக் முன்னிலையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதேவேளை, 1975ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை இலங்கையில் மேற்கொள்வதற்காக சுமார் 170 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை குவைத் அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment