Monday, December 12, 2011

அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது ; புரட்சிப்படை

நாங்கள் பிடித்து வைத்துள்ள அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது என ஈரானின் புரட்சிப்படை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 225 கி.மீ தொலைவில் ஈரானுக்குள் கடந்த டிசம்பர் 4ம் திகதி அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்ததாகவும், அதைச் சிறிதளவு தாக்கியதன் மூலம் தரையிறக்கி விட்டதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி அந்த விமானத்தை ஈரான் அதிகாரிகள் சிலர் பார்வையிடும் காணொளியையும் வெளியிட்டது.இந்நிலையில் ஈரானின் புரட்சிப்படை துணைத் தளபதி உசேன் சலாமி நேற்று(11.12.2011) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, ஈரானின் வான்வெளிக்குள் அமெரிக்க போர் விமானம் நுழைந்தது போரைத் தூண்டும் நடவடிக்கையாகும்.

இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். எனினும் இவ்விமானத்தை நாங்கள் அமெரிக்காவிடம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.ஆர்.க்யூ-170 ரக ஆளில்லா போர் விமானம் ஒன்று காணாமல் போனதை ஒப்புக் கொண்ட அமெரிக்க அதிகாரிகள் அந்த விமானத்தை சுட்டோ, மின்னணு தொழில்நுட்பம் மூலமோ, கணணி தொழில்நுட்பம் மூலமோ ஈரான் தரையிறக்கியிருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

ஆனால் எப்படி அந்த விமானத்தை தரையிறக்கினர் என்பதை சொல்ல மறுத்த சலாமி, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளி குறைவானது தான் என்றார்.

0 comments:

Post a Comment